
துபாயில் இருந்து கடந்த சனிக்கிழமை காலை மங்களூருக்கு வந்த ஏர் இந்தியா விமானம், தரை இறங்கும்போது விபத்துக்குள்ளானது. 158 பேரை பலி வாங்கிய அந்த விமானத்தின் நொறுங்கிய பகுதிகளுக்குள் கறுப்பு பெட்டியை தேடி வந்தனர். விபத்து நடந்தபோது, விமானத்தின் அனைத்து விவரங்களும் அதில் பதிவாகி இருக்கும்.
எனவே, விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடந்த பகுதிகளில் தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. விமான போக்குவரத்து கட்டுப்பாடு (ஏ.டி.சி.), என்ஜினீயர்கள், விமான செயல்பாடுகள் துறை போன்றவற்றை சேர்ந்த 4 குழுவினர் இந்த பணிகளில் ஈடுபட்டனர். தீவிர தேடுதலின் பயனாக பைலட்டு அறையின் குரல்கள் பதிவு கருவி (சி.வி.ஆர்.) மற்றும் விமானத்தின் டிஜிட்டல் ஆவண தொகுப்பு அலகு (டி.எப்.டி.ஏ.யு.) ஆகியவை கண்டு பிடிக்கப்பட்டன.
இதில் டி.எப்.டி.ஏ.யு. என்ற கருவியானது `கருப்பு பெட்டி'யை போலவே தகவல்களை சேமித்து வைக்கும் தகுதி கொண்டது. எனினும், மிகவும் குறுகிய கால அளவிலான தகவல்களை மட்டுமே அந்த கருவி வைத்திருக்கும். இதனால், விமான விபத்து குறித்து ஆராய `கறுப்பு பெட்டி'யை கண்டுபிடிப்பது மிகவும் அவசியமானது. இந்த இரண்டு கருவிகளில் உள்ள தகவல்கள், `கறுப்பு பெட்டி'யிலும் இருக்கும்.
இதற்கிடையே, சி.வி.ஆர். மற்றும் டி.எப்.டி.ஏ.யு. ஆகிய இரண்டு கருவிகளும் கூடுதல் ஆய்வு செய்வதற்காக டெல்லிக்கு நேற்று முன்தினம் கொண்டு செல்லப்பட்டது. இந்த கருவிகள் மூலமாக, மங்களூர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் பைலட்டுகளுக்கு இடையே நடந்த உரையாடல் மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் இன்னும் 15 நாட்களில் தெரியவரும்.
அதே நேரத்தில், கறுப்பு பெட்டியை தேடும் பணியும் தொடர்ந்தன. இந்த சூழ்நிலையில், நேற்று காலை 10 மணி அளவில் கறுப்பு பெட்டி கிடைத்தது. விபத்துக்குள்ளான விமானத்தின் வால்பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த அந்த பெட்டியின் ஒரு பக்கத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. கறுப்பு பெட்டியை கண்டு பிடித்ததும், சிவில் விமான போக்குவரத்து இயக்குனர் ஜெனரலிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
அதை ஆய்வு செய்த இயக்குனர் அலுவலக அதிகாரிகள், `கறுப்பு பெட்டியின் ஒரு பகுதி சேதம் அடைந்தாலும் தகவல்களை பதிவு செய்து வைத்திருக்கும் முக்கியமான நினைவுப் பகுதியில் எந்த சேதமும் ஏற்படவில்லை' என தெரிவித்தனர். கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான பாதுகாப்புக்கான பொதுச் செயலாளர் ஜி.எம்.மேத்ï நிம்மதி தெரிவித்தார்.
கறுப்பு பெட்டி கிடைத்ததை தொடர்ந்து, தேடுதல் பணிகளை சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் நிறுத்தினர். கறுப்பு பெட்டி தவிர, வேறு சில முக்கிய தடயங்களையும் மீட்பு குழுவினர் சேகரித்து வைத்துள்ளனர். கறுப்பு பெட்டியில் உள்ள தகவல்களை ஆய்வு செய்வதற்காக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன் பிறகு, விரிவான ஆய்விற்காக அமெரிக்காவுக்கும் அனுப்பி வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து முழுமையான விசாரணை முடிவுகள் வெளி வருவதற்கு இன்னும் 6 மாதங்கள் அல்லது ஒரு ஆண்டு வரை ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, விபத்தில் பலியானவர்களில் 22 பேருடைய உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மங்களூரில் பல்வேறு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள அந்த உடல்களில் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்னும் 5 நாட்களில் அந்த அறிக்கை வெளியாகும். அதன் பிறகே, 22 பேருடைய உடல்களும் உரிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
0 comments:
Post a Comment