Posted by
டிலீப்
On Sunday, August 15, 2010
இந்தியப் பெருங்கடலில் இருக்கிற மொரீஷியஸ் தீவில் மட்டும் காணப்பட்ட ஒரு வகைப் பறவைதான் டோடோ. இது புறா இனத்தைச் சேர்ந்தது. இந்தப் பறவைகளால் பறக்க முடியாது. ஒரு பறவை 12-லிருந்து 24-கிலோ கிராம் வரை எடை இருக்கும்.
1507-இல் மொரீஷியஸ் தீவில் கப்பலிறங்கிய போர்ச்சுக்கீசிய மாலுமிகளிடமிருந்துதான் இந்தப் பறவையைப் பற்றிய விவரங்கள் முதன்முதலாகத் தெரியவந்தன. ஆனால் 1790-1800-களில், அதாவது கண்டுபிடிக்கப்பட்டு 300 வருடங்களுக்குள்ளேயே டோடோ பறவைகள் அழிந்து போயின.
இப்பறவைகள் சதைப் பற்றான உடல்கொண்டவை. இவற்றின் நடமாட்டமும் மந்த கதியில் இருக்கும். இக்காரணங்களால்தான், அவை பெரிதும் வேட்டையாடப்பட்டன. மனிதனின் பேராசையின் காரணமாக அழிந்துபோன உயிரினங்களில் ஒன்றுதான் டோடோ.
டோடோ பறவையுடன் தொடர்புடைய ஒரு செய்தியும் உண்டு. டோடோ பறவைகள் அழிந்துபோனவுடன், மொரீஷியஸில் ஒரு வகை மரமும் அழிந்துபோகத் தொடங்கியது. இந்த மரத்தின் பெயர் கால்வேரியா .1973-ம் ஆண்டு கணக்குப்படி, இந்த மரத்தில் 13 மட்டும்தான் மொரீஷியஸில் மிச்சமிருந்தது. இந்த மரங்களோ, முன்னூறு ஆண்டுகளுக்கும் அதிகமான வயதுடையவை.
டோடோ பறவை அழிந்த பிறகு, இந்த மரத்தின் ஒரு விதைகூட முளைக்கவில்லை. காரணம் என்ன தெரியுமா? இந்த மரத்தின் பழங்கள்தான் டோடோவின் உணவாக இருந்தன. கால்வேரியா மேஜரின் பழங்கள் மிகவும் கடினமாக இருக்கும்.
அவை, டோடோ பறவையின் உணவாக அதன் வயிற்றின் வழியே கடந்து செல்லும்போது, அவற்றின் கடினமான மேல் ஓடு மிருதுவாகிறது. டோடோவின் செரிமான நீரால் மிருதுவாக்கப்பட்ட விதைகள் மட்டுமே மண்ணில் முளைக்கும். டோடோ பறவை அழிந்ததுடன் இந்த செயல்பாடுகளெல்லாம் இல்லாமல் போயின. எனவே கால்வேரியா மேஜர் மரமும் அழிந்துபோயிற்று.இயற்கை, எப்படியெல்லாம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது.
Post Comment
3 comments:
நல்லது நண்பரே! இது போல் நல்ல தகவல்களை வழங்குங்கள்...
நண்பா தகவல் சுப்பர்
நன்றி : முகமட்,சிவா
இது போன்ற தகவல்களை வழங்க
முயற்சி செய்கிறேன்
Post a Comment